அபிவிருத்தி லொத்தர் சபை

செய்தி

அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவராக அஜித் நாரகல நியமிக்கப்பட்டுள்ளார்.

17-December-2021

அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய தலைவராக அஜித் நாரகல இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமான அஜித் நாரகல, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் நாயகமாகவும் நீண்டகாலம் சேவையாற்றியுள்ளார். நிதி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் பல அரச நிறுவனங்களில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தேசிய சேமிப்பு வங்கியில் சந்தைப்படுத்தல் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். நாட்டின் முன்னணி தனியார் நிறுவனமான மெட்ரோபொலிடன் குழுமத்தின் சந்தைப்படுத்தல் தலைவராகவும் அஜித் நரகலா இருந்துள்ளார். லக்சுரி கேரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.

அஜித் நாரகல களணிப் பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பாடல் துறையில் வெளி விரிவுரையாளராகவும், நுண்கலை பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் வெளி விரிவுரையாளராகவும் கடமையாற்றிவருகின்றார். தற்போது இலங்கை தடகள  விளையாட்டு ​நிறுவனத்தின் சிரேஷ்ட உப தலைவராக உள்ளார். Colombo Television நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றிய அஜித் நாரகல, ஊடகத்துறையில் அனுபவமிக்க முகாமையாளராவார்.

தேசிய மற்றும் சர்வதேச சிறப்பு நிகழ்வுகளை நிர்வகிப்பதில் தனித்திறமை கொண்டவர். 2013 பொதுநலவாய இளைஞர் மாநாடு, 2014 உலக இளைஞர் மாநாடு மற்றும் 15 வது ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டி போன்ற பல சிறப்பு நிகழ்வுகளில் அவர் பிரதான ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றியு​ள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மாநாடுகளிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அஜித் நாரகல பல்வேறு துறைகளில் பல பொறுப்புகளை வகிக்கிறார். இந்தியாவின் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டதாரி ஆவார்.



சிறப்புச் செய்தி